Thursday, May 21, 2020

ஓவியம்


ஒரு தோற்றத்தின் ஒத்த வரைவு 
ஒன்றை பற்றி இருந்து அதோடு 
ஒத்திருப்பது ஓவியம். 

மனிதன் மட்டும் இன்றி 
பிரபஞ்சம் அனைத்திற்கும் 
பொதுவானது ஓவியம். 

பால் வெளி மண்டலமும் 
நட்சத்திர கூட்டமும் 
சூரிய குடும்பமும் 
கிரகங்களின் சஞ்சாரமும் 
பிரபஞ்சத்தின் ஓவியம். 

வானமும் மேகமும் வானத்தின் 
ஊடே சஞ்சரிக்கும் சூரியனும், 
சந்திரனும் ஆகாய நிறங்களும் 
விண் தீட்டிய ஓவியம். 

காலை நேர கதிரவனும் 
விடியலில் பறக்கும் பறவைகளும் 
இரவில் கீச்சிடும் விட்டில் பூச்சிகளும்
குறிஞ்சி, முல்லை, மருதம்,
இவையாவும் நிலத்தில் இயற்கை 
அன்னை தீட்டிய ஓவியம். 

கடலும், கடல்வாழ் உயிர்களும் 
கடல் சார்ந்த தீவுகளும் 
தண்ணீர் இந்த பூமியில் 
தீட்டிய நீர் ஓவியம். 

வார்த்தை ஜாலங்கள் தன் 
பங்கினை அரங்கேற்றாத 
இடத்தில் உணர்சிகளை 
பிரதிபலிப்பது ஓவியம். 

உணர்வுகளை வெளிபடுத்த 
முடியாத இடத்தை 
ஆயிரம் அர்த்தங்கள் கொண்டு 
வெளிபடுத்துவது ஓவியம். 

கற்கால மனிதன் உணர்வுகளை, 
வாழ்வியல் முறையை  கண்டறிய 
இன்று வரை நமக்கு சான்றாக 
இருப்பது ஓவியம் 

அரசியல், சமயம், சமூகம் 
சார்ந்த கருத்துகளை நகைச்சுவை 
ததும்ப கூறுவது இன்றைய 
கேலி சித்திர ஓவியம். 

மொழிக்கு முன்னர் கருத்து 
பரிமாற்றத்தின் தொடர்பு ஊடகமும், 
மொழிக்கு எல்லாம் முப்பாட்டனும் 
நமது ஓவியம். 

காதலருக்கு காதலியின் முகம் ஓவியம் 
குழந்தைக்கு தாயின் முகம் ஓவியம் 
பசித்தவனுக்கு உணவிட்டவன் முகம் ஓவியம் 
நோயாளிக்கு மருத்துவன் முகம் ஓவியம் 
அக்காலம் இக்காலம் எக்காலம் ஆயினும் 
என்றும் நாம்மோடு வாழ்வில் பின்னிப் 
பிணைந்த ஒரு அங்கம் ஓவியம்!!! 

ந‌ன்றி!!!!! 

No comments:

Post a Comment